Aug 11, 2013

அதிசய குழந்தை!

மருத்துவ துறையில் ஓர் அதிசயம்…
குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரியுமா?

தமிழக மக்களை மட்டுமல்ல உலகத்தையே வியக்க வைக்கும் ஆபூர்வ சம்பவம் இது…

பிறந்த குழந்தையின் உடலில் எப்படி தீப்பிடிக்கும் என்ற சந்தேகமும், ஆச்சர்யமும் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்தது. இது நம்ம விட்டலாச்சர்யா படம் அல்ல… மாயாஜாலம் அல்ல. உண்மை சம்பவம்.

இரண்டரை வயது ஆண் குழந்தைக்குதான் இப்படிப்பட்ட அபூர்வ நோய்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (26). மனைவி ராஜேஸ்வரி (23). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு முதலில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக கர்ப்பம் தரித்த ராஜேஸ்வரிக்கு கடந்த மே மாதம் 22–ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை கனவோடு இருந்த அந்த தம்பதிக்கு நினைத்தபடி ஆண் மகன் பிறந்ததால் ராகுல் எனவும் பெயர் சூட்டினார்.

ஆண் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அந்த தம்பதிக்கு 7–வது நாளில் அதிர்ச்சி ஏற்பட்டது.

ராகுலின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பதறினார்கள். பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்கள் தீக்காயங்கள் ஏற்பட்டன. எதனால் குழந்தையின் உடலில் தீப்பற்றுகிறது என்று தெரியாமல் பெற்றோர் கதறியபடி பல இடங்களுக்கு தூக்கி சென்றனர்.

இறுதியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 11–வது நாளில் குழந்தைக்கு உடல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் குளம் சென்று பரிகாரம் தேடியும், ஆனாலும் அவர்களின் வேண்டுதலுக்கு விடை கிடைக்கவில்லை. கண் கலங்கிய பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

அதற்குள் குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி எல்லா இடமும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிசய குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.

குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான்.

இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது என்று ராகுல்உடலை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு தெரிவித்தார்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை, குறித்தும் நாராயணபாபு மாலைமலர் நிருபரிடம் கூறியவதாவது:–

குழந்தை ராகுலுக்கு ஏற்பட்டுள்ள நோயின் பெயர் தானாக தீப்பற்றி எரியும் நோயாகும். மருத்துவ உலகில் இது வினோதமான குழந்தை. 300 வருடத்தில் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் வந்துள்ளது. தமிழகத்தில் முதல் குழந்தை இதுதான்.

குழந்தையின் உடலில் வெளியேறும் வாயு (ஆல்கஹால்) வியர்வையினால் உடலில் தீப்பற்றிக் கொள்ளும். திடீர் திடீரென உடல் தீப்பிடித்து கொண்டு எரிவதால் மிகவும் கவனமாக குழந்தையை கண்காணிக்க வேண்டும்.

ராகுலுக்கு இப்போது 2 1/2 வயது ஆகிறது. அவனுக்கு இதுவரை 4 முறை உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அவனது உடல் முழுவதும் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சியில்தான் உள்ளது. உடலில் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாக குழந்தையை வைத்திருக்க வேண்டும்.

தீ எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் குழந்தை இருக்கும் இடத்தில் வைக்க கூடாது. மண்எண்ணை, பெட்ரோல், டீசல், கியாஸ், அடுப்பு போன்றவற்றின் அருகே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

காற்றோட்டமான குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்க கூடிய உடைகளை அணிவிக்க கூடாது. சில நேரம் உடலுக்கு உள்ளேயும் எரிந்து செல்லும். அதனால் குழந்தையை நன்கு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ராகுலை பொறுத்தவரை நன்றாக இருக்கிறான். அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் தீக்காயங்கள், வடு போன்றவை ஆறிவிடும்.

அமெரிக்காவில் 73 வயதான ஒருவர் இந்நோயால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார்.

ராகுலுக்கு தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வார்டில் வைத்திருக்கிறோம். ஒரு டாக்டர் மற்றும் நர்சு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகிச்சை பெறும் ராகுல் அருகில் தாயும் தந்தையும் இருந்து வருகிறார்கள். அதிசய குழந்தையை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment