Aug 12, 2013

ஆடி அமாவாசை...

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது. துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.

ஆடி அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்

சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

இதற்கு ஒரு புராண சம்பவம் இருக்கிறது.

திரேதா யுகத்தில் ஒரு மகரிஷி இருந்தார். இவர் தாய் – தந்தை இழந்த ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த மகன் வளர்ப்பு, தந்தையான மகரிஷி மேல் அதிக பாசத்துடன் இருந்தான். காலங்கள் ஒடியது. மகரிஷி அதிக வயது காரணமாக இயற்கை ஏய்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மகன், ’இதற்கு காரணம் சூரியேனே. சூரிய பகவான்தான் இறந்த ஆத்மாக்களை பித்ரு தேவதையிடம் சேர்ப்பார். அதனால் சூரியனை பிடித்து பழி வாங்க வேண்டும்’ என்று எண்ணி தன் தவ வலிமையால் சூரியனையும் பிடித்து வைத்தது கொண்டார்.

சூரியன் தன் வேலையை செய்யாததால் சந்திரனால் இயங்க முடியவில்லை. இதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. தேவர்களாலும் சரியாக வேலை செய்ய இயலவில்லை. இனி பொறுமையாக இருந்தால் உலகமே அழிந்துவிடும் என்பதை உணர்ந்த ஈசனும், மகாவிஷ்ணுவும், பிரம்மன் மற்றும் தெவர்களும் அந்த மகரிஷயின் புதல்வனிடம் சமாதானம் பேசினார்கள்.

’உயிர் ஒருநாள் பூலோகத்தைவிட்டு சென்றுவிடும். இது இயற்கைதான். அதை நீ புரிந்துக்கொள்ள வேண்டும்.’ என்று அனைவரும் பேசியதால், மகரிஷியின் மகன் சமாதானம் அடைந்தார். அத்துடன் “என் தந்தையை நான் அவ்வப்போது பார்க்க வேண்டும்.” என்று கேட்டதற்கு, ”நீ உன் தந்தையை எப்போதெல்லாம் நினைக்கிறாயே அன்று உன் தந்தையின் ஆத்மா பூலோகாத்திற்கு வரும். அத்துடன் ஆத்மாக்கள் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த நாள் அன்று பூலோகத்திற்கு அனுப்பப்படும். அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமானதை கொடுத்து மகிழ்வித்து அனுப்பினால், இந்த ஆத்மாக்களின் ஆசியால் அவரவர் குடும்பத்திற்கு சுபிச்சம் ஏற்படும்.” என்று ஆசி வழங்கினர் மும்மூர்த்திகள்.

பித்ரு உலகம் தென்பகுதியில் இருக்கிறது. திதி கொடுக்கும்போது தென்பகுதியை பார்த்து திதி கொடுத்தால், பித்ருக்களை எளிதில் சென்றடையும். அவர்களும் மகிழ்ச்சியோடு சூரியபகவானிடம் சென்று அவர் அனுமதியை வேண்டி பெற்று அவரின் விமானம் மூலமாக மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரை காணப்போகிறோம் என்ற ஆவலோடு வருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது. "திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்".

பித்ரு பூஜை முறைகள்

பித்ருபூஜைக்கு மிக பெரிய செலவு என்பதெல்லாம் இல்லை. காய்கறிகளை தானம் தர வேண்டும். அதில் முக்கியமாக பூசணிக்காயை தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்டசக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெற வழி பிறக்கும். பூசணிக்காய்குள் அசுரன் இருப்பதால் பூசணிக்காயை தானம் செய்யும் போது அசுரன் நம்மை விட்டு விலகுவதாக ஐதீகம். அதுவும் ஆடி அமாவாசை அன்று இவ்வாறு பூஜையில் தானம் செய்வது விசேஷம்.

இயற்கை மரணம் இல்லாமல் ஏதாவது ஒரு துர்மரணத்தால் எவரேனும் இறந்து போய் இருந்தால், அந்த ஆத்மா இறைவனடி சேராமல் அவதிப்படும், அல்லாடும். முறைப்படி வழிபாடு செய்து தம் ஆத்மாவை இறைவனடி சேர வைக்காத தன் குடும்பத்தினர் மீது கோபம் கொண்டு தீங்கு செய்ய கூட துணிந்து விடும். அதனால் அப்பேர்பட்ட ஆத்மாக்களை சாந்தப்படுத்தி இறைவனடி சேர வைக்க, ஆடி அமாவாசை அன்று தர்பணம் செய்தால் அந்த ஆத்மா சாந்தியாகும். ஸ்ரீமன் நாராயணனே அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தி உதவி செய்வதாக கருடபுராணத்தில் இருக்கிறது.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து அவர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபுரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனமார வாழ்த்துவார்கள்.

இறந்தவர்களின் புகைப்படம் இல்லாதவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வணங்கலாம். நாம் பூஜையில் வைக்கும் முகம் பார்க்கம் கண்ணாடியில் பித்ருக்கள் தங்கள் முகத்தை பார்த்து மகிழ்சியடைவார்கள். தங்களின் புகைப்படத்தை வைத்துதான் வணங்குகிறார்கள் என்று எண்ணுவார்கள். அதனால்தான் முகம் பார்க்கும் கண்ணாடியை அமாவாசை, பித்ருக்கள் திதி அன்று வைத்து வணங்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அத்துடன் - முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு உணவு தானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன் பெறும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்பணம் செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

0 comments:

Post a Comment