Feb 28, 2014

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உணவருந்தக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் சிவ ஆலயங்களில் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

  • முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் – சந்தனப்பூச்சு – வில்வம், தாமரை அலங்காரம் – அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் – ருக்வேத பாராயணம்.
  • இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் – பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – பாயாசம் நிவேதனம் – யசுர் வேத பாராயணம்.
  • மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் – பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – எள் அன்னம் நிவேதனம் – சாமவேத பாராயணம்.
  • நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் – நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் – அர்ச்சனை – சுத்தான்னம் நிவேதனம் – அதர்வன வேத பாராயணம்.


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும் என விரும்பும் எவர் ஒருவரும், சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

நன்றி: தினமணி

0 comments:

Post a Comment