Feb 2, 2014

குலதெய்வம் வழிபாடு - 2

காஞ்சிப்பெரியவா என்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த காலம் அது;ஊர் ஊராகச் சென்று தங்குவார்;அப்போது ஒருமுறை ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்;அவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்தித்தார்;

“சாமி,ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு;பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது;ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும்;ஆனா, என் வாழ்க்கையில போராட்டமே வாழ்க்கையா இருக்கு.என்ன செய்றதுனே தெரியல” என்று அழுதார்.

பெரியவா அவரிடம், “ குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்றியா?” என்று கேட்டார்.

“குலதெய்வமா அப்டினா?” என்று திருப்பிக் கேட்டார் அந்த விவசாயி.

“சரிதான்.உங்கள் குல தெய்வம் எதுன்னே தெரியாதா?”

“ஆமாம் சாமி, வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க.பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம்;என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால,அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க.நாங்கள்லாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

“உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

“ஒருத்தர் கிராமத்துல இருக்கார்.அப்பா வழி பட்டனார் அவர்”

“அவர் கிட்ட போயி உங்க குலதெய்வத்தை பத்தி கொஞ்சம் கேட்டுட்டு வா”

“என்ன சாமி நீங்க? ஊர்ல எவ்வளவோ கோயில்  இருக்கு;அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு;அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே”

“அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம,குலதெய்வத்த தான் தெரிஞ்சுகிட்டு வரச் சொல்றீங்களே?”

“காரணமாத்தான் சொல்றேன்;ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்ல;வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான்.எனக்குப் பாத்திரமே கூட தேவையில்லை; ஆனா,உனக்கு பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வைக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா,அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா போகாதா?”

அந்த விவசாயியும் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தார்.

“சாமி,நீங்க சொன்னதை செய்துட்டேன்.எங்க குலதெய்வம் பேரு பேச்சாயிங்க ஒரு அம்மன்.அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு.யாருமே போகாம விட்டதால,கோயிலை புதர் மூடிடுச்சு.நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம்.அங்க ஒரு நடுகல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு,கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்”

“சபாஷ்! அந்த கோயில நல்லபடியா எடுத்துக் கட்டு.தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டம் தானா நீங்கிடும்.அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! நான் சொன்னதை மறந்துடாதே.பேச்சாயியை விட்டுடாதே” என்றார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்து வந்தார்.ஒரு வருடமும் ஓடியது.ஓருவருடம் கடந்ததும்,பெரியவாளைச் சந்திக்க அந்த விவசாயி வந்தார்.இந்த முறை அவரிடம் செல்வச் செழிப்பு தெரிந்தது.முகத்தில் மலர்ச்சி கலந்த புன்னகையும்! பெரியவாளைப் பார்க்க அந்த விவசாயி சும்மா வரவில்லை;தட்டு நிறைய பூக்கள்,பழங்கள்,கொஞ்சம் தட்சிணையாக பணக்கட்டுடன் வந்து நின்றார்.பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“சாமீ! நான் இப்ப நல்லா இருக்கேன்.பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க.இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்.ஆனா,எனக்கு விளக்கத்தை மட்டும் இன்னும் தராம இருக்கீங்க.இந்த அதிசயம் எப்படி நடந்தது?” அந்த விவசாயி திரும்பக் கேட்டார்.

பெரியவாளும் மனம் மகிழ்ந்து,


நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வம் ஆகும்.முன்னோர்கள் என்றால்,நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால்,இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன்கள்,பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தந்தை வழிப்பாட்டன்மார்கள் வரிசையில் ஒரு பிரம்மாண்டமான ஒழுங்கு இருக்கிறது.அதுதான் கோத்திரம் என்ற ரிஷியின் வழிவழிப்பாதை;தலைமுறைப்பாதை.


பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்துணையாகக் கைபிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.இதனால் ரிஷி(சித்தர்) பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல்,ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும்.இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன.அந்த கோவில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்;போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை;ஆனால்,குலதெய்வக் கோவிலுக்கு,நாம் பக்தி என்ற ஒன்றை அறிவதற்கு முன்பே,நம் தாய் தந்தையரால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு,வணங்க வைக்கவும் படுகிறோம்.இதன்படி பார்த்தால்,நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது,எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

நன்றி: ஆன்மீகக்கடல்

0 comments:

Post a Comment