Oct 31, 2013

விமான பணிப்பெண்ணின் சமயோசிதம்.

விமானத்தில் பெண் ஒருத்தி ஒரு ஆப்பிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத் துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து   ‘நீக்ரோ’  வின் அருகில் தன்னால் தொடர்ந்து அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள்.

ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண்.   இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள்,   குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.

அந்த அப்பாவி ஆப்பிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எதிர்பார்த்திருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, “முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது,   இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும்   “எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை”   என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்.” என்று கூறி முடித்தாள்.

சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.

சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து,   "சார்,   தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள்.   விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்.” என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள்.   குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர்.

அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊழியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.

மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்….!

0 comments:

Post a Comment