Feb 28, 2014

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்

ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல்பட்டுவந்தது.அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்! அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து,யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.மூன்று கால்களில் நிற்பது,முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன;ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்துவிடுகிறான்.அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை;அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது;சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.அவர்கள் மருந்து,மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.ஆனாலும்,அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை;அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், ‘யானையை நான் குணப்படுத்தட்டுமா?’ என்று கேட்கிறான்.அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று,அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்.யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது.சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, “ நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே! அப்படி என்னதான் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.அந்த வழிப்போக்கன், “இந்த யானை இந்தியாவில் இருந்து வந்துள்ளது.யானைப்பாகன் இந்தியில் பேசி அதை பராமரித்து வந்தான்.பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.நானும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.அதனால் யானைக்கு அந்த மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவுதான்” என்றான்.

ஒரு யானைக்குக் கூட அதைப்பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.மரபும்,தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை;

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது.ஆனால்,இங்கே மட்டும் தான் அது நடக்கிறது.இங்கே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்.ஆனால்,அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும்,அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்.

நன்றி: ஜூனியர் விகடன்.

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உணவருந்தக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் சிவ ஆலயங்களில் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

  • முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் – சந்தனப்பூச்சு – வில்வம், தாமரை அலங்காரம் – அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் – ருக்வேத பாராயணம்.
  • இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் – பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – பாயாசம் நிவேதனம் – யசுர் வேத பாராயணம்.
  • மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் – பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – எள் அன்னம் நிவேதனம் – சாமவேத பாராயணம்.
  • நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் – நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் – அர்ச்சனை – சுத்தான்னம் நிவேதனம் – அதர்வன வேத பாராயணம்.


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும் என விரும்பும் எவர் ஒருவரும், சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

நன்றி: தினமணி

Feb 24, 2014

வம்பு பேசாதீர்கள்.... ஆப்பு காத்திருக்கிறது!

ஒரு துறவி காட்டில் நிஷ்டையில் இருந்தார்.அவர் சுரதலப்பிட்சை எடுத்துச் சாப்பிடுவார்.(சுரதலப்பிட்சை என்றால் கையை நீட்டியபடி தவத்தில் இருப்பார்;அவர் கையில் யார் எதை வைக்கிறார்களோ அதுதான் அவருக்கு அன்றைய உணவு!அதைத்தான் சாப்பிட வேண்டும்;)


ஒருநாள்,வேட்டையாட வந்த அந்தப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த துறவி தவம் செய்து வந்த இடத்திற்கு வந்தான்;வேட்டையாடிக் களைத்துப் போன அந்த மன்னனுக்கு தாகம் எடுக்கவே இந்த துறவியைப் பார்த்து தண்ணீர் கேட்டான்.தன்னை மறந்து தவத்தில் இருந்த அந்த துறவிக்கு மன்னன் கேட்டது காதில் விழவில்லை;மன்னனுக்கோ வேட்டையாடிய களைப்பில்,இந்தச் சாமியார் தன்னை மதிக்கவில்லை; என்று நினைத்து,கோபத்தில் குதிரைச் சாணத்தை அந்த துறவியின் கைகளில் வைத்துவிட்டு குடிநீர் தேடி வேறு இடம் போய்விட்டான்.


துறவி கண்விழித்துப் பார்த்தபோது,தனது கையில் குதிரைச்சாணம் இருந்ததைக் கண்டு,அதையே அன்றைய உணவாகச் சாப்பிட்டுவிட்டார்.யார் எதை அவர் கையில் வைத்தாலும் அதைச் சாப்பிட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆயின.மன்னன் இந்த சம்பவத்தை மறந்தே போனான்.


மன்னனின் மகள் பருவமடைந்து,பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகவில்லை;சரியான வரன் அமையவேயில்லை;மன்னன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, ‘இளவரசிக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று தனது மகளுடைய ஜாதகத்தைக் கொடுத்தான்.ஜோதிடர் அதை ஆராய்ந்து, “தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக யாகம் ஒன்று நடத்துங்கள்;அவ்வாறு செய்தால் இளவரசியின் திருமணதோஷம் நீங்கிவிடும்” என்று கணித்துச் சொன்னார்.அதன்படி,தேவர்களை மகிழ்ச்சிப்படுத்துவிதமாக யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன்.


துறவிக்கு மன்னன் செய்த பாவச்செயலை அறிந்த தேவர்கள்,காட்டுக்குப்போய் அந்த துறவியைச் சந்தித்தார்கள்.அவர்கள் நடந்ததை துறவியிடம் தெரிவித்தனர். “மன்னன் எங்களைக் குறித்து யாகம் நடத்தினான்.யாகத்தின் பலனை நாங்கள் தரவேண்டியது எங்கள் கடமை ஆகும்.ஆனால்,அதற்கு முன் உங்களை குதிரைச்சாணம் சாப்பிட வைத்த பாவத்தைப்போக்கினால் தான் நாங்கள் தரும் வரம் பலிதமாகும்;எனவே,இதற்குத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று விவரித்தனர்.துறவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.


துறவி ,மன்னனின் அரண்மனைக்குச் சென்று, மன்னன் தனக்குச் செய்த இழிசெயலை நினைவூட்டினார். ‘நான் உனக்கு எந்த சாபத்தையும் கொடுக்கவில்லை;நீ செய்த வினையின் பலனை நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய்.இதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன்;கொஞ்ச காலத்திற்கு அரசாங்கத்தை உனது மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு.நீயும் உன் மகளும் காட்டிற்குச் சென்று அங்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு இருங்கள்;நான் பட்ட துயரங்களை நீயும் அனுபவிக்கும் போது தான் என்னைப் போன்ற துறவிகள் படும் கஷ்டங்கள் உனக்கும் புரியும்.உனது பாவமும் மன்னிக்கப்படும்;தினமும் நீ என்னைப் போன்று பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்;’ என்று உபதேசம்  செய்தார்.


மன்னனும் துறவியிடம் ஆசி பெற்று,தனது மகளுக்குத் திருமணம் ஆனால் போதும் என்பதற்காக அவரது வார்தைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கினான்.(பரிகாரங்களை எப்போதும் ரகசியமாகவே செய்ய வேண்டும்;பகிரங்கப்படுத்தினால்,பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும்)இதைப் பற்றி அறியாத அவனது நாட்டு மக்கள் மன்னன் மீதே அவச்சொல்லாகப் பேசினார்கள்.பேசக்கூடாத விதங்களில் மன்னனையும்,அவரது மகளையும் இணைத்து வைத்துப் பேசினார்கள்.இப்படி நாட்டு மக்கள்,அவர்களின் மன்னனைப் பற்றிப் பேச,பேச பேசியவர்களிடம் மன்னனின் பாவங்கள் ஒட்டிக்கொண்டன.மலை போல இருந்த பாவச்சுமையானது,நாடு முழுக்க இருந்த மக்களின் அவச்சொற்களால் விலகிவிட்டது.


ஒருநாள்,ஒரு பார்வையில்லாத கணவனும்,அவனது மனைவியும் அந்த காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அந்த பார்வையில்லாத கணவன்,தனது மனைவியிடம், “இன்று நமக்கு யார் உணவு தருவார்?” என்று கேட்டான்.
அதற்கு அவன் மனைவியோ, “தன் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான லட்சியத்திற்காக, ராஜ்ஜியத்தையே தியாகம் செய்துவிட்டு,காட்டில் தவசியாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உன்னதமான மன்னனின் ஆசிரமத்தில் தான் நமக்கு இன்று உணவு!!!” என்று கூறினாள்.இருவரும் மன்னனின் ஆசிரமத்தை அடைந்து இளவரசி அளித்த உணவைச் சாப்பிட்டனர்.


இளவரசியிடம், ‘என் புருஷன் பார்வையற்றவர்;இவருக்காக வாழ்நாள் முழுவதும் நான் தியாகம் செய்திருக்கிற பலனில் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன்.உனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்’ என்று இளவரசிக்கு குங்குமம் வைத்து ஆசி கூறினாள்.இந்த ஆசியாலேயே அடுத்து வந்த சில மாதங்களில் இளவரசிக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்தது.

இந்த உண்மைச்சம்பவம் தெரிவிப்பது என்ன?
தப்பு செய்பவருக்குத் தண்டனை நிச்சயமாக உண்டு;அந்த தண்டனை எப்படி கழியும்?
தப்பு செய்தவரின் கர்மாவை வேறு யாராவது வாங்கிக் கொண்டால் தான் போகும்.
யார் அடுத்தவரின் தப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள்?
பிறரின் வாழ்க்கையில் நடந்த உண்மைநிலையை அறியாமல் வம்பு பேசுபவர்கள்தான் அடுத்தவரின் தப்புக்களின் கர்மவினைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.இவன் இப்படி,அவன் அப்படி,அவளைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்;இவளைப்பற்றி எனக்கு அப்பவே தெரியுமே என்று வம்பு பேசுபவர்களே அடுத்தவர்களின் கர்மச்சுமைகளை சுமக்கிறார்கள்.

நன்றி:ஜோதிடபூமி

Feb 2, 2014

ஆன்மீகப்பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்

இளைஞர்கள் நவீனமாக இருக்க வேண்டும்;ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

நமது பாரத தேசம் மகத்தான ஆன்மீகப்பாரம்பரியத்தை கடந்த 200 நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது;நாம் ஒவ்வொருவருமே சித்தர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்;காலத்துக்கேற்ற மாற்றம்;பாரம்பரியத்தைக் கைவிடாத மாற்றம் என்ற கொள்கையில் ஒவ்வொரு நாளும் பிடிவாதமாக இருக்க வேண்டும்;நமது ஆன்மீகச் சிறப்புகளையும்,தொன்மையையும் யாருக்காவும்,எதற்காகவும்,எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது;இதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ப மாறுதல்களை உள்வாங்கிக் கொள்வது தவறல்ல;ஆனால்,அதே சமயத்தில் நமது கலாச்சாரத்தையும்,தர்மத்தையும் கைவிட்டுவிடலாமா?

முன்னேற்றம் என்ற பெயரில் நமது பண்பாட்டுக்கு எதிரான செயல்களை நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

ஒருபோதும் மனித நேயத்தையும்,பரிவுணர்வையும்,பிறருக்கு உதவி செய்வதையும் கைவிட்டுவிடக்கூடாது.அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வது நமது பாரம்பரியம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.ஒருங்கிணைந்து பணிபுரியும் பண்பினை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டால்,சில வருடங்களிலேயே நமது தேசம் வலிமைமிக்கதாக மாறிவிடும்.

சுவாமி விவேகானந்தரின் பேச்சு,
விஜயபாரதம்,
வெளியீடு 7.2.14

குலதெய்வம் வழிபாடு - 2

காஞ்சிப்பெரியவா என்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த காலம் அது;ஊர் ஊராகச் சென்று தங்குவார்;அப்போது ஒருமுறை ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்;அவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்தித்தார்;

“சாமி,ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு;பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது;ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும்;ஆனா, என் வாழ்க்கையில போராட்டமே வாழ்க்கையா இருக்கு.என்ன செய்றதுனே தெரியல” என்று அழுதார்.

பெரியவா அவரிடம், “ குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்றியா?” என்று கேட்டார்.

“குலதெய்வமா அப்டினா?” என்று திருப்பிக் கேட்டார் அந்த விவசாயி.

“சரிதான்.உங்கள் குல தெய்வம் எதுன்னே தெரியாதா?”

“ஆமாம் சாமி, வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க.பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம்;என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால,அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க.நாங்கள்லாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

“உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

“ஒருத்தர் கிராமத்துல இருக்கார்.அப்பா வழி பட்டனார் அவர்”

“அவர் கிட்ட போயி உங்க குலதெய்வத்தை பத்தி கொஞ்சம் கேட்டுட்டு வா”

“என்ன சாமி நீங்க? ஊர்ல எவ்வளவோ கோயில்  இருக்கு;அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு;அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே”

“அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம,குலதெய்வத்த தான் தெரிஞ்சுகிட்டு வரச் சொல்றீங்களே?”

“காரணமாத்தான் சொல்றேன்;ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்ல;வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான்.எனக்குப் பாத்திரமே கூட தேவையில்லை; ஆனா,உனக்கு பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வைக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா,அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா போகாதா?”

அந்த விவசாயியும் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தார்.

“சாமி,நீங்க சொன்னதை செய்துட்டேன்.எங்க குலதெய்வம் பேரு பேச்சாயிங்க ஒரு அம்மன்.அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு.யாருமே போகாம விட்டதால,கோயிலை புதர் மூடிடுச்சு.நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம்.அங்க ஒரு நடுகல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு,கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்”

“சபாஷ்! அந்த கோயில நல்லபடியா எடுத்துக் கட்டு.தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டம் தானா நீங்கிடும்.அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! நான் சொன்னதை மறந்துடாதே.பேச்சாயியை விட்டுடாதே” என்றார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்து வந்தார்.ஒரு வருடமும் ஓடியது.ஓருவருடம் கடந்ததும்,பெரியவாளைச் சந்திக்க அந்த விவசாயி வந்தார்.இந்த முறை அவரிடம் செல்வச் செழிப்பு தெரிந்தது.முகத்தில் மலர்ச்சி கலந்த புன்னகையும்! பெரியவாளைப் பார்க்க அந்த விவசாயி சும்மா வரவில்லை;தட்டு நிறைய பூக்கள்,பழங்கள்,கொஞ்சம் தட்சிணையாக பணக்கட்டுடன் வந்து நின்றார்.பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“சாமீ! நான் இப்ப நல்லா இருக்கேன்.பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க.இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்.ஆனா,எனக்கு விளக்கத்தை மட்டும் இன்னும் தராம இருக்கீங்க.இந்த அதிசயம் எப்படி நடந்தது?” அந்த விவசாயி திரும்பக் கேட்டார்.

பெரியவாளும் மனம் மகிழ்ந்து,


நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வம் ஆகும்.முன்னோர்கள் என்றால்,நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால்,இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன்கள்,பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தந்தை வழிப்பாட்டன்மார்கள் வரிசையில் ஒரு பிரம்மாண்டமான ஒழுங்கு இருக்கிறது.அதுதான் கோத்திரம் என்ற ரிஷியின் வழிவழிப்பாதை;தலைமுறைப்பாதை.


பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்துணையாகக் கைபிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.இதனால் ரிஷி(சித்தர்) பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல்,ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும்.இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன.அந்த கோவில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்;போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை;ஆனால்,குலதெய்வக் கோவிலுக்கு,நாம் பக்தி என்ற ஒன்றை அறிவதற்கு முன்பே,நம் தாய் தந்தையரால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு,வணங்க வைக்கவும் படுகிறோம்.இதன்படி பார்த்தால்,நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது,எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

நன்றி: ஆன்மீகக்கடல்

Jan 31, 2014

சி.எஃப்.எல். பல்பு - சில தகவல்கள்


'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

நாளைய இளைய சமுதாயத்திற்கு.....

நீங்கள் பத்தாம் வகுப்பு/+2/பட்டப்படிப்பு/டிப்ளமோ/ பொறியியல் படிப்பு என்று எதை முடித்தாலும் இந்த உலகத்தை,மனிதர்களைப் பற்றி மிகவும் குறுகிய காலத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? குறைந்தது ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலும் நேரடி விற்பனையாளர் என்ற மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்ற வேலைக்குச் சென்றால் போதும்.

நமது கல்விக்கு நமது ஐந்தாம் வயது முதல் 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஒதுக்குகிறோம்;நாம் விரும்பும் படிப்பில் சேர்ப்பதோடும்,உரிய கட்டணங்கள் செலுத்துவதோடும் நமது பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது;ஆனால்,அந்த படிப்பில் அதிகமான கிரேடு வாங்க நாம் தான் படிக்க வேண்டும்;

படித்து முடித்த பல பட்டதாரிகள்,                               என் ஜினியர்கள்,டிப்ளமோதாரர்கள்,ஐ.டி.ஐ.,முடித்தவர்கள் அனைவருக்குமே வேலை காத்திருக்கிறது.ஆனால்,டிப்ளமோ முடித்த 1000 பேர்களில் 150 பேர்கள் தான் நல்ல வேலையில் சேருகிறார்கள்;பி.ஈ.,பி.டெக்., முடித்த 1,00,000 பேர்களில் 2000 பேர்கள் தான் தனது படிப்புக்குரிய வேலையில் சேருகிறார்கள்;காரணம்?
தனது படிப்பு படிக்கும் போது சாஃப்ட் ஸ்கில் எனப்படும் சிலபல மென் திறன்களை வளர்த்துக் கொள்வதைப் பற்றிய அடிப்படை ஞானம் கூட பலருக்கு இல்லை என்பதே!

அதென்ன சாஃப்ட் ஸ்கில்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்;கூடவே சரளமாக ஆங்கிலப் பேச்சுப்பயிற்சியும் கற்றுக் கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களிலும் ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வரை சரளமாக ஆங்கிலம் பேசப் பழக வேண்டும்;(மாநகரங்களில் வசிப்பவர்கள் ஆங்கிலத்தோடு ஸமக்ஸ்க்ருதம் மற்றும் இன்னொரு ஐரோப்பிய மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்வது அவசியம்)பனிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வு எழுதிய அன்றே பைக் டிரைவிங்,கார் டிரைவிங் கற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும்;கற்றுக்கொண்டு,பயிற்சி முடித்தமைக்கான லைசென்ஸ்களை வாங்கியே ஆக வேண்டும்;

சில ஆன்மீக அமைப்புகள் நடத்தும் கோடைகால பண்புப்பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்;அவை குறைந்தபட்சம் ஏழு நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரை இருக்கும்;இந்த நாட்களில் இப்பயிற்சி முகாம்களில் செல்போன் பேச அனுமதி இராது.உடல்பயிற்சியுடன் கூடிய தேசபக்தி சார்ந்த நாட்டு வரலாறு போதிக்கப்படும்.இதன் மூலமாக நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை இளவயதில் முழுமையாக உணரமுடியும்.தற்போது பெண்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள்.(தமிழ்நாட்டில் பெரும்பாலான மகன்கள்/மகள்கள் அம்மாகோண்டுகளாகவோ,அப்பாச்செல்லங்களாகவோ இருக்கிறார்கள்;இந்த நிலையை மாற்றி தனது வேலைகளை தாமாகவே செய்யப் பழகுவதற்கும்,எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்வதற்கும்,மாறி வரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதற்கும் இந்த முகாம்களுக்கு டீன் ஏஜ் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்).இதன் மூலமாக அளவற்ற தன்னம்பிக்கை உருவாகும்;

டிப்ளமோ/பட்டப்படிப்பின் ஒவ்வொரு வருட செமஸ்டர் விடுமுறையின் போதும் மார்கெட்டிங் எக்ஸிகுயூடிவாக உள்ளூரில் இருக்கும் வேலையில் இலவசமாகக்கூட பணிபுரிவது நன்று + அவசியம்.
ஏன் எனில்,நாம் படித்துப் பெறும் பட்டப்படிப்பு இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே! எது நிஜமான கல்வி தெரியுமா? சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை உணர வைக்கும் கல்வியே உண்மையான கல்வி! அது சந்தைப்படுத்துதல் என்ற மார்கெட்டிங் துறையில் மட்டுமே விரைவாக கிடைக்கிறது.
யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும்? என்ற அணுகுமுறை விஞ்ஞானம்(BEHAVIOUR SCIENCE) புத்தகங்களில் இல்லை;இருந்தாலும் அதை நம்மால் 30 வயது வரை பின்பற்றி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திட முடியாது.


அது மட்டுமல்ல;நமது பாரத தேசத்தில் ஒரு மனிதனது உண்மையான சொத்து என்பது அவரு/ளுடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் வீடு,நகைகள்,சேமிப்புப் பத்திரங்கள்,தோட்டம் போன்றவை அல்ல;நம்பிக்கையும்,விசுவாசமும் மிக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள்/நண்பிகளே! மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கும் லாவகமே!


தனி மரம் ஒருபோதும் தோப்பாக முடியாது;மனிதனுக்கு உறவுகள் அவசியம்;உற்றார்,உறவினர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்;ஆனால்,நல்ல நட்பு கஷ்டகாலத்தில் கைகொடுக்கும்;ஆறுதல் கூறும்;சரியான விதத்தில் வழிகாட்டும்;
பழகும் போது நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்;அவ்வாறு இருப்பது மிகவும் அவசியம்;நல்லதொரு முன்மாதிரி நண்பர்கள்,தம்பதியர் குறைந்துவிட்டதால் தான் இன்றைய இளைஞர்கள் சின்னத்திரை நாயகர்களையும்,நாயகிகளையும்,திரைப்பட நாயகர்களையும்,நாயகிகளையும் முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்பத்தை அனுபவிக்க எத்தனை,எத்தனையோ உறவுகள் ஓடி வரும்;ஆனால்,துன்பத்தை,வேதனையை,அவமானத்தை,துயரத்தை,அவமதிப்பை பகிர்ந்து கொள்வதற்கு இந்த செல்போன் யுகத்தில் எத்தனை உறவுகள் முன்வருகின்றன?

1990 வரை ஒரு நிறுவனத்தில் மேனேஜராவதற்குத்தான் இந்த மாதிரியான திறமைகள் தேவைப்பட்டன;தற்போதைய வருடமே 2014! வேலையில் சேருவதற்கே இந்தத் தகுதிகள் தேவைப்படுகின்றன;பள்ளி,பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்;முதலில் திக்கித் திக்கித்தான் பேச முடியும்.யார் தன்னம்பிக்கை அதிகமாக  வைத்திருக்கிறார்களோ,யார் தனது எட்டாம் வகுப்பு முதல் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் வைத்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே மேடையில் கோர்வையாகப் பேச முடியும்.

பின்வரும் விதிமுறைகள்+ சந்தைப்படுத்துதல் அனுபவம் இரண்டுமே உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திடவும்,தாழ்வு மனப்பான்மையின்றியும் வாழ கைகொடுக்கும்;

1.உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகளைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

2.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் உலகம்;அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

3.உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றித் தெரியாவிடில்,உடனே தெரியாது என்று உரியவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.அதே சமயம்,அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒன்றும் அவமானகரமான செயல் அல்ல;

4.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு;அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம்.

5.நீங்கள் ஒரு தவறு செய்து அதை மற்றவர்கள் கண்டுபிடித்து உங்களிடமே சொன்னால்,தயங்காமல் அந்தத் தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள்;

6.மற்றவர்களின் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களுக்கு உங்களை பிடித்துப்போகும்;

7.கோபப்படும் போதோ அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போதோ செல்போனில் சம்பந்தப்படுபவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.குறுந்தகவலும் அனுப்ப வேண்டாம்.

8.பணம்,நேரம்,பேச்சு இவைகளை அளவோடும்,தேவைப்படும் போதும் மட்டும் செலவிடப்பழகிக் கொள்ளுங்கள்.இந்த கருத்தை முறையாகப் பின்பற்றினால் அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் துறையில் நீங்கள் தான் முன்னோடியாகத் திகழுவீர்கள்.

9.ஒருவருடைய குறையை எப்போதும் எவரிடமும் கூறாதீர்கள்.உங்களைப் பற்றி யாராவது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
10.எப்போதும் சுருக்கமாகப்பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

11.மனதைச் சலனப்படுத்தும்,கிளுகிளுப்புக்குள்ளாக்கும்,போதைக்குள்ளாக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு போதும்,ஒரு தடவைகூட இடம் தராதீர்கள்.ஆரம்பத்தில் மன மகிழ்வூட்டுவதாகவும்,போகப் போக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்த ‘கிளுகிளுப்பு’ சீர்குலைத்துவிடும்;உங்கள் நினைவுத்திறனை அழித்துவிடும்;நோயாளியாக்கிவிடும்; போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் இடத்தை தக்க வைக்க முடியாமல் போய்விடும்.

12.இணையம்,செல்போன்,முகநூல்,டுவிட்டர் போன்றவை தகவல் தொழில்நுட்ப சாதனைகளின் உச்சம் தான்! ஆனால்,நேரடியாக சந்தித்து பேசி,பழகுவதைப் போல சிறந்த அணுகுகுறை(behaviour)யைப்போல வேறு எதுவும் இந்த உலகில் எந்த நூற்றாண்டிலும் தோன்றப்போவது கிடையாது.நேரடியாகப்பேசி,பழகுவதன் மூலமாகவே ஒரு சிறந்த நட்பையோ,வாழ்க்கைத்துணையையோ மதிப்பிட முடியும்.

13.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டுவிடவேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

14.பிற மனிதர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனிக்கப்பழகிக்கொள்ளுங்கள்.

15.பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்;அதே போல பிறர் உங்களுடைய நேரத்தை வீணடிக்க அனுமதிக்காதீர்கள்.

16.ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும்,அதைச் செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.

17.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

18.ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

19.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள். மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

20.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது பாரத தேசம் வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன? நமது வேலை/தொழிலை அக்கறையோடும்,நேர்மையாகவும் பார்ப்பது மட்டுமே!

நன்றி: தினமலர்

Jan 24, 2014

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்

இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.

சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில்,

உணவின்றித் தவித்த இருகுழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர். பொட்டலங்களைக் கொடுத்தான்.

முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.

அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.

இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.

கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

Jan 19, 2014

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

நினைவாற்றல் குறைபாடு நோயா?

இயற்க்கை அன்னையின் இயல்பிற்கு மாறாக இருப்பின் எல்லாமே நோயே.

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.