Nov 7, 2013

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப... அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

0 comments:

Post a Comment