Nov 14, 2013

உலக கதாபாத்திரங்கள்

உலகிலே காணப்படுகின்ற அத்தனை விதமான மனிதர்களையும் கதாப்பாத்திரங்களாகக் கொண்டது மகாபாரதம்.நல்லவர்கள், தீயவர்கள், பொறாமை குணம் உள்ளவர்கள், அறிவில் சிறந்த பெரியவர்கள், சிறு மதி படைத்த கயவர்கள், நன்றி உள்ளவர்கள், துரோகிகள், வீரர்கள், கோழைகள், வள்ளல் குணம் கொண்டவர்கள், நட்பில் சிறந்தவர்கள், கடமையில் சிறந்தவர்கள், முனிவர்கள், ரிஷிகள், துறவிகள் என்று அதில் இல்லாத கதாபாத்திரங்கள் எதுவும் உலகில் கிடையாது. அந்த அளவு வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் உடையது இந்த உலகம் என்பதை உணர்த்துவதே கோட்பாடு. கண்ணனுடைய விஸ்வரூபத்தைப் பார்க்கும் வரை அர்ஜுனனுடைய கண்ணோட்டமும், மனநிலையும் வேறு விதமாக இருந்தது. ஆனால், அதைப் பார்த்த பிறகு அவன் அடியோடு மாறி விட்டான். தனக்கு உற்றவர்களும், தனக்குக் கேடு செய்பவர்களும் அனைவருமே பகவானுடைய சொரூபத்தில் அடங்கியிருப்பதைக் கண்டான். தான் போர் புரியாவிட்டாலும் பல உயிர்களை துடைத்து ஒடுக்கவது இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்து கொண்டான். அது போல தங்கள் செயல்களுக்கெல்லாம் தாங்களே கர்த்தாக்கள் என்று உயிர் வகைகள் எல்லாம் எண்ணிக் கொள்கின்றன. பரம் பொருளை உணர்ந்த ஞானிகள் நிலையோ வேறு. அவர்களுக்குத் தெரியும் தாங்கள் எதுவுமில்லை என்பது. கருவியும் அவனே. கர்த்தாவும் அவனே. காரியங்களும் அவனே.

இந்த உலகில் காணப்படுகின்ற முரண்பாடுகளெல்லாம் முரண்பாடுகளே அல்ல என்பது ஈசனை உணர்ந்தவர்களுக்கே தெரியும். பரமசிவன் சொரூபத்தில் அவ்வுண்மையை அவர்கள் அடக்கி வைத்துச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சர்ப்பத்துக்கும், சந்திரனுக்கும் தீராத பகை என்பது ஐதீகம். ஆனால், சிவனாருடைய சொரூபத்தில் அவை இரண்டும் அருகருகே இடம் பெற்றிருக்கின்றன. தீயை அணைக்க வல்லது தண் புனல். ஆனால், சிவனாரின் ஜடா முடியிலிருந்து பாயும் கங்கையோ அவர் கையில் ஏந்தியிருக்கும் அனலை அணைக்காமலிருக்கிறது. விலங்குகளில் பெரியது யானை. சிறியது எலி. யானை வடிவிலிருக்கும் பிள்ளையார் எலியை வாகனமாகக் கொண்டிருப்பதன் மூலம், ஈஸ்வர சொரூபத்தில் பெரியது, சிறியது என்ற பேதம் கிடையாது என்பதை உணர்த்துகிறது. கொழுத்த காளையைப் பார்த்தால் சிங்கம் அதைக் கொன்று தின்று விடுமே அல்லாது,அதனோடு கூட நட்புறவோடு படுத்துக் கிடக்காது. ஆனால், சிவனாரின் சொரூபத்திலோ அம்பிகையின் வாகனமாக சிங்கமும், அண்ணலின் வாகனமாகக் காளையும் அருகருகே அமர்ந்திருக்கின்றன. பொறாமையோ, பயமோ, பகையோ அங்கு இல்லை.

ஆற்றலில் சிறந்தவனாகக் குமரன். அறிவில் சிறந்தவனாக கணபதி. குமரனின் காலுக்கடியில் எதிரிகளான மயிலும் பாம்பும் நட்போடு விளங்குகின்றன. அங்கே விரோத மனப்பான்மை என்பது துளி கூடக் கிடையாது. இறைவனின் திருவடியின் கீழ் காமம், கோபம், குரோதம் அழிந்து பட்டுப் போகின்றது. ஆற்றலில் சிறந்த குமரனா, அறிவில் சிறந்த கணபதியா யார் மேலோன், யார் கீழோன் என்று நிர்ணயிக்க யாராலும் முடியாது. பெயரளவில் ஒருவன் பெரியவன், மற்றவன் சிறியவன் அவ்வளவுதான். மற்றபடி ஈஸ்வர சாந்நியத்தித்தில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஈஸ்வரனுடைய சொரூபத்தில் வேற்றுமைக்கோ, பேதத்திற்கோ, முரண்பாடுகளுக்கோ இடமில்லை. அனைத்தும் அவர் மயமாகி விடுகின்றது. அர்ஜுனனுக்குக் கிடைத்த விஸ்வரூபக் காட்சி சிவனாரரின் சொரூபத்திலேயே அடங்கி இருக்கிறது. பரம்பொருளை உணர்ந்த ஒவ்வொரு ஞானியும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டவர்களே. ஊனக் கண் கொண்டு காண்பவர்களுக்கு அது படம். ஞானக் கண் கொண்டு காணும் போது அது சொல்வதோ பெரும் பாடம்.

0 comments:

Post a Comment